# வடலூர் சர்வதேச மையம் # உண்மை விளக்கம் #

# வடலூர் சர்வதேச மையம் # உண்மை விளக்கம் #
 
அனைவருக்கும் பணிவான வணக்கம். அன்பர்களே, நம்மவர்களே,
  1.  ஏன் சர்வதேச மையத்தை நாம் ஆதரிக்கிறோம்?
  2.  பெருவெளி பற்றி வள்ளலாரின் விளக்கம் என்ன?
  3.  வேத ஆகமம் புராணம் சமயம் இவை மீது நம்பிக்கை கொண்டோர் ஏன் வலிந்து வந்து சர்வதேச மையம் கூடாது என வழக்கிட்டுள்ளார்கள்?
 
இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துக் கொண்டால், நம் வள்ளலாருக்கு பெருமைகள் சேர்த்த தமிழ்நாடு அரசை நாம் பாராட்ட வேண்டிய காரணம் புரியும். பணிவுடன்: வள்ளலார் வழி அன்பர்கள் மற்றும் சங்கங்கள்.
கேள்வி
1: ஏன் சர்வதேச மையத்தை நாம் ஆதரிக்கிறோம்?
சர்வதேச மையம் என்றால் என்ன? அதில் அறநிலையத் துறை என்ன செய்து தரப் போகிறது? அதில் வருபவை அனைத்தும் வள்ளலார் நெறிப்படி உள்ளதா? இது போன்ற விளக்கங்கள் எதுவும் சங்க அன்பர்களுக்கு ஆரம்பத்தில் தெரியாது என்பதே உண்மை ஆகும். மறுக்கவில்லை. சர்வதேசமையம் கூடாது என வழக்கிட்ட மூவரில் இருவர் பி.ஜே.பி (ஆன்மிகப் பிரிவு) மற்றும் சநாதன இயக்கம் எனத் தெரிய வந்தது.
 
வழக்கில் திரு ஆணையர் மற்றும் வடலூர் நிலைய நிர்வாகி தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்கள் வழியாகத்தான் விபரங்களை நம்மவர்கள் தெரிந்துக் கொண்டோம். அதன் பின்பு தான் இத்திட்டம் மீது திருப்தி ஏற்பட்டது. நிற்க! அதன் பின்பு; நமது ஏபிஜே. அருள் @ இளங்கோ, வழக்கறிஞர் அவர்கள் மூலம் தலைமைச் சங்கமும் மேற்படி வழக்கில் இடை மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.
 
அன்பர்களே, வடலூரில் சர்வதேச மையம் என்றப் பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியில் கீழ்வரும் திட்டங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.
 
  •  தருமச்சாலையின் கட்டிடத்தை சரி செய்து மேலும் விரிவுபடுத்துதல்,
  •  பெரிய ஆர்ச் கட்டி தருதல், ஆர்ச்-லிருந்து சபை வரை நல்ல ரோடு போடுதல், (ரோட்டிலிருந்து சபை நன்றாக தெரியுமாறு செய்தல்)
  •  சத்திய ஞான சபை கட்டிடத்தில் எந்தொரு மாற்றமும் கிடையாது. சுற்றுப்புறமும் அப்படியே பாதுகாக்கப்படும்.
  •  சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு சில மணி நேரம் அங்கு அமர்ந்துச் செல்ல வசதிகள்.
  • அடிப்படை சுகாதார வசதிகள் எல்லாம். மிக முக்கியமாக வள்ளலார் விரும்பிய மீதமுள்ள ஆறு சாலைகள் அமைத்து தரவும் முன் வந்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அமைக்கப்படும் கட்டிடங்கள் சபையைவிட உயரமில்லாமல் இருக்கும்.
 
(கட்டப்படும் ஆறுசாலை கட்டிடங்களில் மூன்றுசாலைகள் அதாவது, ஏழைகளுக்கான மருத்துவமனை, முதியோர் இல்லம், தாங்கும் விடுதி இவை இன்று “பி” செட்டிலுக்கு சென்றுவிட்டது.
மீதமுள்ள மூன்று எதுவெனில்; பாடச்சாலை (சாத்திர சாலை); விசாரக்கூடம் (விவகார சாலை); பயிற்சிக்கூடம் (யோக சாலை) இவைகளைத் தான் கட்டித் தருகிறார்கள். சுமார்
மூன்றரை ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமையவுள்ளது. இவைகளே வாக்குமூலத்தில் பிரதானமாக உள்ளது கண்டு மகிழ்ந்தோம். நம்புகிறோம். மேலும்;
 மாதப்பூசம் ஆகட்டும், வருட தைப்பூசம் ஆகட்டும் வரும் மக்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. அதுவும் இங்கு வரும் ஏழைகள் படும்பாடு சொல்லிமாளாது.
 சபை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் முதல் நாள் இரவே வந்து அப்படியே தரையில், பனியில் படுக்கும் நிலை.
 மதியம் காட்டப்படும் ஜோதி தரிசனத்தை கடும் வெயிலில் நடந்து வந்து ஜோதி பார்த்து, சிறிது ஒய்வு எடுக்க இடமில்லாமல் உடனே திரும்பும் மக்கள்.
 சத்திய தருமச் சாலையில் கடும் நெருக்கடி கூட்டத்தில் பசியாற்றிக் கொள்ளுதல், நெறி குறித்து சரியாக தெரிந்துக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் அப்படியே திரும்ப வைத்தல்,
 இதற்குமுன், திருக்கோயில் எனக்கருதாமல் ஏதோ சந்தை போல் பல நூறு விற்பனைக் கடைகளுக்கு ஏலம் விடுதல், கண்காட்சி கூடாரங்கள், விளையாட்டு ராட்டினங்கள் மற்றும் மற்ற கோயில்களில் நடப்பது போல் சடங்குகளை செய்ய வைத்தல்.
 துறை ஊழியர்களுக்கு போதிய அலுவலக அறைகள் இல்லாதிருத்தல்.
 சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பெண்கள், குடும்பத்துடன் வருபவர்கள் இவர்கள் அமரக்கூட வசதி இல்லாமை.
 வள்ளலார் சபை கட்டிய காரணமே, அங்கு உண்மை சொல்லுவதற்கே. ஆனால் அதை சமயக் கோவில் போல் தீபாராதனை சடங்குகள் செய்து ஜோதியை காட்டி மக்களை அனுப்பி விடுதல்.
 வள்ளலாரின் பொது நெறி பரவி விடக்கூடாது என்பதற்காகவே சபையில் மாதம் ஒரு முறை மட்டுமே ஜோதி காட்டி, மற்ற நாட்களில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் வெறுமனே நிலையத்தை வைத்து வருதல்.
 இதையெல்லாம் எப்பொழுது நீங்கி, திருவருட்பிரகாச வள்ளலாரின் தனி நெறி – பொது மார்க்கம் உலகில் வெளிப்பட உள்ளது.?
இந்நிலையில்தான் இன்றைய தமிழ்நாடுஅரசு, வள்ளலாருக்கு விழா எடுத்து, அவரின் பிறந்தநாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து, வள்ளலார் நிலையத்தை மேன்மைப்படுத்தி கொடுத்து, அவரின் தனி நெறியை உலக அளவில் தெரியபடுத்தும் நோக்கத்தில், சுமார் நூறுகோடிகளை அரசு ஒதுக்கியது என்றால், நமக்கு மகிழ்ச்சி இல்லையா? அரசுக்கு நன்றிச் சொல்லி வரவேற்க வேண்டுமா? வேண்டாமா?
ஆக, முதல் கேள்விக்கு (ஏன் சர்வதேச மையத்தை ஆதரிக்கிறோம்?) உரிய பதிலை தெரிந்துக்கொண்டோம், சர்வதேச மையம் என்ற பெயரில் வரும் பல திட்டங்கள் நாம் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். அதுவும் தலைமை சங்கம் ஆரம்பிக்கும் போது, அன்று, தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்த கோரிக்கைகளில் பல, இந்த சர்வதேசமையத்திட்டத்தில் உள்ளது. நம் கோரிக்கையை தான் அரசு நிறைவேற்றி உள்ளது.
நிற்க! இதில் “சில முக்கிய குறைபாடுகளும்” உள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை அல்லது மறைக்கவில்லை. கட்டிடங்களுக்கு பூசும் பூச்சு வர்ணம், ரோடு சைடில் வைக்கும் சில சமய அடையாளங்கள், கட்டிடங்களில் ஆர்ச்சில் சமயக் கோபுரம் போல் அமைப்பு, தினம் ஜோதி காட்டுவது குறித்து சொல்லாமல் உள்ளது, தலைமை சங்கத்திற்கான இடம், இவை குறைபாடுகளே. அவைகளை நாம் உரியமுறையில் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும், நமக்கென ஒரு இடத்தை பெற வேண்டும்.
அடுத்த கேள்வி 2: பெருவெளி பற்றி வள்ளலாரின் விளக்கம் என்ன?
பெருவெளியை கட்டிடங்கள் கட்டி சிதைக்கக்கூடாது, என்பது காணியில் எதுவும் கூடாது என்று சமயமத ஆசாரத்தில் நம்பிக்கைக் கொண்ட அன்பர்கள் (கரிசனம் கொண்டு?) நமக்கான திட்டங்களை எதிர்த்து அவர்கள் தான் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
அன்பர்களே, ஒரு ஆன்மிக இயக்கமோ அல்லது அறிவு சபையோ, நிலையமோ தங்களின் கொள்கையை விளக்குவதற்கு, பரப்புவதற்கு, தேவையானவைகளை செய்துக் கொள்கின்றன. உதாரணமாக இஸ்லாமியர் மசூதி, கிறிஸ்தவ சர்ச், சைவ சமய கோயில்கள், வைணவ கோயில்கள், இன்னும் பல மார்க்கங்கள் தங்கள்தங்கள் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் வழிபாடுகள் செய்ய மற்றும் வேண்டுதல்களை செய்ய தேவையான இடங்கள் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளனர். அப்படித்தானே!
உதாரணமாக; பீர்முகமது தர்கா, வேளாங்கண்ணி மாதா, ஸ்ரீரங்கம் திருச்சி, திருப்பதி ஏழுமலையான், சீரடி சாய்பாபா, பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், இராமேஸ்வரம் கோயில், திருச்செந்தூர் தலம் மற்றும் இன்று கட்டியுள்ள அயோத்தி ராமர் கோவில் வரை, அங்கு எல்லாம் வரும் பக்தர்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள், காணிக்கையை செலுத்தும் வண்ணம் கட்டிடங்கள், தங்கு விடுதிகள், அலுவலகம், புத்தக கடைகள், பிரசாத கடைகள், உட்கார்ந்து செல்ல இடங்கள், என்று எல்லாம் உள்ளது இன்னும் வசதிகள் பெருகி வருகிறது. அதனால் அவர்களின் மார்க்கங்களின் கொள்கை கோட்பாடுகள் பரவி வருகிறது. அப்படித்தானே!
நிற்க! அதுபோல் தானே வள்ளலாரின் கருணை நெறி பரவிட தரும சாலை, வழிபாட்டு சபை இவை போக, வள்ளலார் விரும்பிய மீதமுள்ள ஆறு சாலைகள் அதாவது; கருணை அடிப்படையில் மருத்துவ சாலை, உபகார அடிப்படையில் முதியோர்களுக்கான சாலை, தங்கும் விடுதி, அறிவு விருத்தி அடிப்படையில் விசார சாலை, நன்முயற்சி பயிற்சி அடிப்படையில் பாட சாலை மற்றும் சுத்த மெய்ஞான யோகச் சாலை இவையெல்லாம் நிலையம் அமைக்க வேண்டுமா? வேண்டாமா? வள்ளலார் இதை கையெழுத்துப் பதிவேடாகவே செய்துள்ளார்கள்.(பக்கம்:622).
வள்ளலார் விரும்பியப்படி சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உலகமெங்கும் விரைந்து பரவ வேண்டும். 80 -காணி நிலத்திலே தான் மேற்படி சாலைகளை அமைக்க வள்ளலார் திட்டமிட்டுள்ளதை பெருமானாரின் அறிவிப்பே சாட்சியாக உள்ளது. நிற்க! மீதமுள்ள சாலைகள் அமைய வேண்டுமா? வேண்டாமா? அன்பர்களே!
அவர்களின் கோயில், நிலையங்களில் அவர்களின் தெய்வம் வீற்றிருக்கும் இடம் (கருவறை) மட்டும் தான் உள்ளதா? வேறு எந்த கட்டிடங்களும் கட்டவில்லையா?
இருப்பினும் “பெருவெளி” பற்றி வள்ளலார் சொன்ன விளக்கம் என்ன? என தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். நம் அய்யா ஏ.பி.ஜே.அருள் அவர்கள் தந்த மிகத் தெளிவான விளக்கத்தின் மூலம் பெருவெளி உண்மை அறியலாம். நம் தலைமை சங்கம் கூட நூலாக வெளியிட்டுள்ளது.
அன்பர்களே! “வேதத்தில்” பெருவெளிக்கான விளக்கம்;
பெருவெளி என நேரிடையாக வைதீக வேதம் சொல்லவில்லை. ஆனால் லோகங்களை பற்றிச் சொல்லியுள்ளார்கள். அவை பூமிக்கு மேல் ஏழு லோகங்களும், கீழ் ஏழு லோகங்களும் என்கிறார்கள். லோகங்களின் விளக்கமும் தந்துள்ளனர்.
நிற்க: நம் வள்ளலாரின் கட்டளையானது; (பக்கம்:416): லோகத்தில் லட்சியம் கூடாது, லோகங்களின் கட்டுப்பாட்டு ஆசாரத்தை விட்டொழிக்க வேண்டும். ஒழித்தால் தான் கருணை விருத்தியாகி பொதுநோக்கம் வரும் என்கிறார். அடுத்து,
“சமயங்களில்” பெருவெளி என்பதற்கான விளக்கம்;
பூமிக்கு வெளியில் ஏழு வெளிகள் உள்ளன. அவையாவன; சல வெளி, வன்னி வெளி, வாயு வெளி, ஆகாச வெளி, பரை வெளி, பராபர வெளி, சச்சிதானந்த வெளி எனப்படுகிறது. இதற்கான விளக்கம் அருளியுள்ளனர் சமய ஞானிகள். ஆனால்;
சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படும் பெருவெளி என்பது; மேலே சொல்லப்பட்ட லோகங்கள் ஆகட்டும் அல்லது சமயத்தில் சொல்லப்படும் வெளிகள் ஆகட்டும் இன்னும் வள்ளலாரால் விவரிக்கப்படும் மற்ற வெளிகள் ஆகட்டும், இவையெல்லாம் தன்னகத்தே பெற்று விளங்குகின்ற ஒரு வெளியே “பெருவெளி” என்கிறார் வள்ளலார். பெருவெளியை நம்மால் புறத்தில் சுட்டி காட்ட முடியாது, விவரிக்க முடியாது, வெறும் கண்ணால் பார்க்க முடியாது, சாதாரண அறிவால் உணர முடியாது. இந்த “பெருவெளியில்” தான் எல்லாம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பெருவெளியை தாங்கும் சுக வெளி முழுதும் பரிபூரணமாக நிரம்பியுள்ளது “அறிவு என்னும் மெய்பொருள் அவர் ஆண்டவர்”. ஆண்டவரின் சொரூபம் “ஒளி அருட்பெருஞ்ஜோதி” ஆகும்.
 
திருஅகவலில் சுமார்-50 இடங்களிலும், ஆறாம் திருவருட்பாவில் 56-பாடல்களுக்கு மேலாகவும், இந்தப் பெருவெளி பற்றி விளக்கியுள்ளார் வள்ளலார். பெருவெளியின் உயர்ந்த விளக்கம் APJ அருள் நூலிருந்து சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
 
• கணக்கு வழக்கு அது கடந்தது பெருவெளி
• வெளி எலாம் விளங்கும் பெருவெளி, கரையில்லாது ஓங்குவது
• ஒன்றான ஒன்று பெருவெளி பெருவெளியில் ஜோதி மயமே
• உளத்தே அரு உடைய பெருவெளி, உறைந்த அனுபவ பெரு வெளி
• வேதம் ஆகமம் உண்மைவெளி தோன்ற உரைக்கவில்லை
• சமயங்களை கடந்த தனிப்பொருள் வெளி
• மதங்களை கடந்தது, சுட்டுதற்கு அரிதாம்
• ஆறு அந்தத்து நிறை ஜோதி அதற்கு அப்பாலும் விளங்கும் வெளி
• உரை மனம் கடந்தது, தனி வெளி, தனி இயற்கை வெளி
• மனம் இடம் கொண்ட தெய்வங்களுக்கு அப்பால் விளங்கும் வெளி
• தகர மெய்ஞ்ஞான தனி வெளி, அளப்பதற்கு அரிது
• தத்துவங்களை, சாக்கிரங்களை கடந்தது, ஆனந்த அனுபவ வெளி
• குறி குணங்கள் கடந்த வெளி பெருவெளி, உற்றறிதற்கு அரியது
• புறம்,புறப்புறம்,அகம்,அகப்புறம் விளங்கும் பெருவெளி
• மற்ற வெளிகள் எல்லாம் கடந்து அதன் மேல் அப்பாலுள்ளது
• பெருவெளியில் எல்லாம் தோற்றுவிக்கப்படுகிறது
• அருட்பெருவெளியில் அமர்ந்துள்ள அருட்பெருஞ்ஜோதி
• கோடிக்கணக்கான விண்கள் அடங்க விளங்கும் பெருவெளி
• ஓங்கும் பிண்ட அண்டங்கள் தாங்கும் பெருவெளி
• பூதவெளி பகுதிவெளி முதல் எல்லா வெளிகளும் விளங்கும் பெருவெளி
• மற்ற வெளிகள் ஏழும் கலந்து கரையும் தாய் வெளி
• வெளிக்குள் வெளி கடந்து விளங்குகிறது. மவுனம்,நாதம்,துரியம் கடந்தது
• எல்லாம் இடங்களும் நீக்கமற ஒளியான வெளி, இவ்வொளியில் சிவமே
• கண்டமெல்லாம் கடந்து நின்று அகண்டதுமாய் அதுவும் கடந்தது
• எலாம் கொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுக்கும் வெளி
• ஒளி, உணர்வு, நிறை, விளைவு, சுத்த அறிவு, எல்லாம், பெருவெளி சிவமே
• மெய் பொய் இல்லா வெளி சுத்த அறிவான வெளி
• வெளிப்புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே
அன்பர்களே! ஆக, பெருவெளியை நம்மால் உணரவோ, பார்க்கவோ முடியாது ஆனால் அருளால் அகத்தில் கண்டு தரிசிக்கலாம். கேள்வி 2 க்கு பதில் கிடைத்து விட்டது. பெருவெளி என்பது என்பது காணி மட்டுமில்லை எல்லாமே பெருவெளி, பெருவெளியில் எல்லாம், எனத் தெரிந்துக் கொண்டோம். இப்பொழுது நம்மிடையே மூன்றாவது கேள்வி எழுகிறது; அது;
மூன்றாவது கேள்வி : வேத ஆகமம் புராணம் சமயம் மீது நம்பிக்கை கொண்டோர் ஏன் வலிந்து வந்து சர்வதேச மையம் கூடாது என வழக்கிட்டுள்ளார்கள்?
ஆரிய வேத ஆகமம், சமய. மத, மார்க்கங்கள், இதிகாசம், புராணங்கள், இவற்றில் லட்சியம் கூடாது. கருணை விருத்திக்கு தடையாகவுள்ள சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் இவற்றை விட்டொழிக்க வேண்டும். இவை (13)பதின்மூன்று. அவையாவன : ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம்,
தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம்,
கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திர ஆசாரம்.
இந்த பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்தால் தான் பொது நோக்கம் வரும். பொது நோக்கம் உள்ளவரால் மட்டும் செய்யும் அறிவு ஆசார விசாரத்தில் தான், கடவுளின் உண்மை விளங்கி, பேரின்ப பெருவாழ்வுக்கான வரம் அருளப்படும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். வள்ளலாரின் தனி நெறி வெளிப்பட்டால், அறிவு வழி தோன்றும், வேதஆகமம், சாதி,சமய ஆசாரங்கள் “எல்லாம் ஒழிந்துவிடும். ஆதிக்கம் செலுத்தும்நிலை இல்லாது போகும். எல்லோரும் எல்லாம் பெறுவர்”. நிற்க!
ஏன் இவர்கள் சர்வதேச மையத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா!
அன்பர்களே!நம்மவர்களே!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியானது தனி (பொது) நெறி. மேற்படி நெறியில் உள்ளவை:
• சாதி, சமயம், மதம், ஆகமம் ஆசாரங்கள் எல்லாம் பொய்.
• நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு.
• உண்மை அறிவால் அறியப்படுகின்ற கடவுள் ஒருவரே.
• அவரின் உண்மை நிலை ஒன்றெனும் ஒன்றே.
• கடவுளின் அருளுக்கு கருணை ஒன்றே சாதனம்.
• மற்றவை எல்லாம் எக்காலத்திலும் முக்கியத் தடைகள்.
• கருணைஎன்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே.
• கருணை விருத்திக்கு தடையாகவுள்ள பதின்மூன்று சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டொழித்து, பொதுநோக்கத்தை வருவித்துக்கொள்ளுதல்.
• இடைவிடாது கருணை நன்முயற்சி பயிற்சி செய்ய வேண்டும்.
• நம் ஒருமையில், ஆண்டவரே விரைந்து வந்து உண்மையைத் தெரிவிப்பார்.
• நம் விரும்பியபடி நித்திய வாழ்வை பெறுவோம்.
இது சத்தியம்.
 
எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே. இரக்கமுள்ளவர்கள் நம்மவர்கள்.
(நன்றி::: சுத்த சன்மார்க்கம் சங்கம், சென்னை. வள்ளுவர் வள்ளலார் மன்றங்கள், வள்ளலார் T.சன்மார்க்க அறக்கட்டளை, ஒளி இயக்கம், வள்ளலார் தயவு தருமசாலை, கருணை சபை-சாலை, வள்ளலார் சாகா கல்வி மையம், அருள் கூடம், ABC ORGANISATION, வள்ளலார் அறிவியல் மையம், & V.U.S.S.S.S.S பெடரேஷன்.) – அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.