Tag: Thani neri

  • தமிழ் அருளிய தனி நெறி, வள்ளலார் வழி பொது வழி – ஏன்? எப்படி? எதற்கு?

    தமிழ் அருளிய தனி நெறி

    வள்ளலார் வழி பொது வழி

    ஏன்? எப்படி? எதற்கு?

    (APJ ARUL)

    வணக்கம் ஏபிஜே அருள். உண்மை குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

    அன்பர்களே, வள்ளாலார் என்றாலே ஜீவகாருண்யம், ஒழுக்கம், அன்பு, தயவு, கருணை, ஒருமை, அருள் என்கிறார்கள். ஆனால் வள்ளலார் காலத்து முன்பே இவையெல்லாம் வெளிப்பட்டு விட்டது. சமய ஞானிகளால், தமிழ் சான்றோர்களால் விளக்கப்பட்டு, அவற்றின் வழியில் வாழ்ந்து சிறப்புடன் இருந்துள்ளனரே.

    இந்நிலையில் அதே கருணை, தயவு, ஒருமை இவற்றை கொண்டு எப்படி வள்ளலார் அருளியது தனி நெறி, புதிய மார்க்கம் எனச் சொல்ல முடியும்?.ஆம் உண்மை தான், ஜீவகாருண்யம் என்பது சமய சன்மார்க்கங்களிலும் அதன் இயல்பாக உள்ளது என வள்ளலாரே (உரை நடைப்பகுதி பக்கம்: 406-ல்) சொல்லியுள்ளார்கள். அன்பே சிவம் என்கிறது சைவ சமயம்-ஞானி திருமூலர்.

    ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது திருக்குறள். கருணையின் சிறப்பை ஜைண சமயம் சொல்லுகிறது. அருள் பெறுதல் பற்றி வேத, சமய மத சன்மார்க்கங்கள் வியம்புகிறது. இப்படி இருக்கையில், மேற்படி வார்த்தைகளைக் கொண்டே வள்ளலார் எப்படி ஒரு புதிய பாதையை, தனி நெறியை கண்டு வெளிப்படுத்தியதாக சொல்ல முடியும்? இது நல்ல விசாரம் தான்.

    ஆதாரங்களுடன் பார்ப்போம். முதலில் எடுத்துக் கொள்வது ஜீவகாருண்யம்:

    ஜீவகாருண்ய ஒழுக்கமானது, எல்லா சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுவான (ஆசாரம்) செயல் ஆகும். ஒருவர் எந்தொரு (சமய) நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவரிடம் இருக்க வேண்டிய அடிப்படை தகுதியே ஜீவகாருண்யம். வள்ளலார் சைவ சமயப்பற்றுக் காலத்திலேயே ஜீவகாருண்ய ஒழுக்கம் குறித்து மூன்றுப் பகுதிகள் கொண்ட நூலை எழுதியுள்ளார். ஜீவகாருண்ய ஒழுக்கமுள்ளவரே உண்மையை தெரிந்துக்கொள்ள முடியும் என எல்லா மார்க்கங்களும் நேரிடையாக அல்லது மறைமுகமாக சொல்லியுள்ளதை நாம் ஊன்றி கவனித்தால் தெரிந்துக் கொள்ளலாம். (இறைவீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யமே. நாம் வணங்கும் இறைவனுக்கு புலால் சம்மதமா? என எனது சிறு நூல் வாங்கி படிக்க வேண்டுகிறேன்.)

    ஜீவகாருண்ய ஒழுக்கத் தகுதியை பெற்றவர்தான் சத்திய ஞான சபை படியில் ஏறுவதற்கே அனுமதிக்கப்படுவர். வள்ளலார் இதை கட்டளையாக சபை வாசல்களில் சொல்லியிருப்பார் – “புலை கொலை தவிர்த்தோர் உள்ளே புகுதல் வேண்டும்”.

    ஆக, ஜீவகாருண்ய அடிப்படை ஒழுக்கம் தவிர, சுத்த சன்மார்க்க தனி நெறியை வெளிப்படுத்தும் மற்ற சொற்களாகிய கருணை, ஒருமை, உரிமை, தயவு, சுத்தம், அருள் என ஒருவாறு சொல்லலாம்.

    “கருணை” : (At page No.416).

    கருணை என்பது; கிருபை, இரக்கம், தயவு, நன்னெறி, நடத்தை என பலப்பொருளை கருணை என்றச் சொல்லுக்கு தமிழ் அகராதி தருகிறது. ஆனால், கருணைக்கான மேற்படி அர்த்தங்களை தவிர, மேலும் ஒரு புதிய அர்த்தத்தை தருகிறார் வள்ளலார்

    கருணை என்பது;

    “எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்து அன்புமே” என்கிறார்.

    மற்ற உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுவது என்பது கருணை என எல்லோரும் அறிவர். ஆனால் வள்ளலார் ஆண்டவரித்து அன்புமே என கருணைக்கான பொருளில் புதிய விளக்கத்தை வள்ளலார் சேர்க்கிறார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

    சுத்த சன்மார்க்கத்தில் கருணை என்னும் தயவு மட்டுமே சாதனம். மற்ற உயிர்களை தம் உயிர் போல் பாவிப்பது மட்டுமில்லாமல் உண்மை ஆண்டவரின் நிலை கண்டு அவரிடத்து அன்பு வைத்து வேண்டுவதும் கருணை ஆகும்.

    அடுத்து; “ ஒருமை”, அகராதி படி ஒருமை என்பது;

    ஒன்றை, ஒற்றுமை, சகாயம், நிலைபெறுதல், ஏவல் என்கிறது தமிழ் நிகண்டு.

    ஆனால் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் (பக்கம்: 414) யாதெனில்;

    “.. தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும் ஒருமை.”

    இங்கு ஒழுக்கம் என்பது ஆசாரம்/செயல்/வழி-மார்க்கம் ஆகும்.

    சுத்த சன்மார்க்கம் என்ற வழியானது எவர் அறிவில் சரியே என ஒத்து வருகிறதோ அவரிடம் ஒருமை வரும் என்கிறார். அந்த ஒருமையில் கருணை நன்முயற்சி இடைவிடாது செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

    அடுத்து; சுத்தம் என்ற சொல்:

    சன்மார்க்கம், அருட்பெருஞ்ஜோதி, சிவம், விந்து என்ற வார்த்தைகள் வள்ளலாருக்கு முன்பே வெளிப்பட்டு விட்டது. நிற்க! பொதுவாக, சுத்தம் என்றால்; அறிவு, தூய்மை, புனிதம், நெருப்பு, துப்பு என்கிறது அகராதி. ஆனால் வள்ளலார் சுத்தம் என்னும் சொல்லுக்கு புதிய பொருளை தருகிறார்கள். இதோ;

    (பக்கம்:404) சுத்தம் எனபது ஒன்றும் அல்லாதது. அதனால் சுத்த சன்மார்க்கம் யாதெனில்; சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன்பாக (பூர்வம்) வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது. மேலும் சொல்கிறார்; விந்து பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்த விந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்த சிவம் போலும், சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.

    மேலும், சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதனவல்ல என்கிறார் வள்ளலார். (உ.ம்.: பத்து ரூபாயில் ஒரு ரூபாய் உண்டு ஆனால் ஒரு ரூபாயில் பத்து ரூபாய் கிடையாது).

    அடுத்து சமரசம்:  (பக்கம்:401) என்றால் ஒத்து போதல், ஒழுங்கமைத்தல், ஒற்றுமை என பொருள்படும். ஆனால் வள்ளலார் சமரசம் என்பதை ஐக்கியம் ஆதல் என்கிறார். ஆறு அந்தங்களும் இரண்டில் நான்காக ஐக்கியமாகி, அனுபவத்தில் சுத்த வேதாந்த சித்தாந்தமாய் ஐக்கியமாகி, இதன் அந்தாந்த மாகிய சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம் என்கிறார். இதன் அடிப்படையில் தான் சுத்த சன்மார்க்கம் எந்த மார்க்கத்திற்கும் அந்நியமல்ல என்கிறார். அதே நேரத்தில் சுத்த மார்க்கத்தார்கள் சமய மதங்களில், வேதம் ஆகமங்களில் புராண இதிகாச கலைகளில் லட்சியம் வைக்கக் கூடாது. காரணம் அக அனுபவமாகிய சுத்த சன்மார்க்கமே உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் (பக்கம்:407) என்கிறார் வள்ளலார். 

    அடுத்து இரக்கம்; இரக்கம் என்றால் மற்ற உயிர்களிடத்தில் நாம் காட்டும் தயவு ஆகும். நாம் செய்த இந்த இரக்கச் செயலுக்கு எதிர் வினையாக நாம் இறைவனின் இரக்கத்தை பெற வேண்டும். (பாடலில்) “..என்பால் இரக்கங் கொண்டிலையே..” என்கிறார். இறைவனின் தயவுக்கு நாம் பணிந்து நெகிழ்ந்து அழ வேண்டும் இதுவும் இரக்கம் ஆகும் என்கிறார்.  இதன் அடிப்படையில்தான் கருணை என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே என்கிறார் வள்ளலார்.

    அன்பு என்றால்; தெரிந்தவர்மாட்டு ஏற்படுகின்ற உணர்வு என்கிறது தமிழ் அகராதி. ஆண்டவரிடத்து அன்பு வைக்க நாம் உண்மை ஆண்டவரை (நிலைப் பற்றி) தெரிந்திருக்கவேண்டும். ஞானிகளால், சான்றோர்களால் இதுவரை அறிந்திடாத போது நாம் நம் தரத்தில் எங்கனம் அறிய முடியும்?. அதனால் தான் வள்ளலார். “இறைவா, நீயே வந்து, உன் உண்மை நிலையை காட்டு” என வேண்டுகிறார். இந்த வேண்டுதல் வைக்க, நாம் முதலில் வள்ளலார் சென்ற வழியை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருமையுடன் நன்முயற்சி செய்ய வேண்டும்.

    அடுத்து அருள்; வேத ஆச்சிரம வாழ்க்கையில், இறை திருவடியை சமாதி / முத்தி மூலம் அடைந்து பிறவா நிலை வேண்டி பெறுதலே அருள் என்பர். ஆனால், வள்ளலாரோ அருள் என்றால்; மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி, விரும்பிய நித்திய தேகம் பெற்று, பேரின்ப பெரு வாழ்வில் வாழ்தலே அருள் என்கிறார்.

    ஆக,

    சுத்தம், சமரசம், கருணை, ஒருமை, இரக்கம், அருள்பயன் இவற்றிற்கான புதிய உண்மை அர்த்தத்தை அருளால் வள்ளலாருக்கு அறிவிக்கப்பட்டு, தெரிந்துக்கொண்ட வழியே சமரச சுத்த சன்மார்க்கம் என நாம் தெரிந்துக் கொண்டோம்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாருக்கு தமிழ் அருளிய “தனி நெறி”

    ஆசாரமில்லா கருணை நெறியில் பயணித்த வள்ளலார் வழி “பொது வழி”

    நன்றி: APJ அருள் – 8778874134.