
Category: உபதேசக் குறிப்புகள்
-
இதே நாள் அன்று #வள்ளலார் அவர்கள் ஒரு மகாபேருபதேசம் ஆற்றினார்கள்
# இதே நாள் அன்று #147 வருடத்திற்கு முன்பு தமிழ் மாதம் ஐப்பசி 7 ல்அன்று ஆங்கில தேதி அக்டோபர் 22ம் நாளில் வடலூர் சித்தி வளாகத்தில் வள்ளலார் அவர்கள் ஒரு மகாபேருபதேசம் ஆற்றினார்கள். அன்று சொன்ன உண்மை என்ன?– ஏபிஜெ அருள்.சாதாரண மக்கள் “எளிதான முறையில்” அறிந்து கொள்ளும் வகையில் மற்றும் அறிவு சான்றோர்களை “ஆழமாக சிந்திக்க” வைக்கும் வகையிலும் அமைந்துள்ளதே வள்ளலார் 22/10/1873 ல் (ஐப்பசி 7)ஆற்றிய மகாபேருபதேசம் ஆகும்.வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கம் குறித்து அறிய விரும்பி வரும் அன்பர்கள் முதலில் வாசிக்க வேண்டியது இந்த உபதேசம் ஆகும்.இது சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கிய ஆவணம் ஆகும்.காரணம்;1. வள்ளலார் சமயப்பற்றை முற்றிலும் கைவிட்டு விட்டு சுத்த சன்மார்க்க நெறியை மக்களிடத்தில் (2 1/2) இரண்டரை வருடங்களாக சொல்லி வருவதாக அறிவித்த குறிப்பு .2. தனது மார்க்கத்தின் மகாமந்திரத்தை இதில் வெளிப்படுத்தியது.“அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெரும் கருணைஅருட்பெருஞ்ஜோதி”3. சுத்த சன்மார்க்கத்திற்கென தனி “கொடி” வெளிப்படுத்தி அக்கொடியை ஏற்றி, ஆற்றிய உரையே இப்பேருபதேசம்.4. “நான் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலைக்கு (முடிவான கொள்கைக்கு) தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கி விடவில்லை” என்ற அழுத்தமான பதிவு.5. தான் கண்டு வெளிப்படுத்திய முடிபான தனி நெறி (சுத்த சன்மார்க்கம்) பற்றி அன்றைய அன்பர்கள் எந்தளவு தெரிந்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார்.அது;“உண்மை சொல்ல வந்தேனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை” எனவும் தெரிவித்தார் வள்ளலார்.அன்பர்களே,வள்ளலார் சொல்லிய அந்த உண்மை தான் என்ன? என்பதையும் இதில் காணலாம்.உண்மை வெளிப்படுத்தும் அந்த வார்த்தை“தயவு”.அந்த தயவுக்கு ” ஒருமை ” வரவேண்டும். ஒருமையில் தான் தயவு வரும் என்கிறார் வள்ளலார்.“ஒருமை” என்றால்..?(உ.ந.பக்கம் 414-ல்) வள்ளலார் விளக்கம் சொல்கிறார்கள்;ஒருமை என்பது யாதெனில்;“தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும். மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது” என்கிறார் வள்ளலார்.ஆக ‘ஒருமை’ என்பது“தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்”.ஒருமை = தனது அறிவு + ஒழுக்கமும்‘தனது அறிவு’ என்பது அவரவர் பெற்றியிருக்கும் அறிவே.ஆக ‘தனது அறிவுடன்’ (அவரவர் பெற்றியிருக்கும் அறிவுடன்) ஒழுக்கம் சேர்ந்து, அவை இரண்டும் ஒத்த இடத்தில் ஒருமை தானாக கூடும்.இங்கு “ஒழுக்கம்” எது என வள்ளலார் குறிப்பிடும் போது;”இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”. யாதெனில்;“இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தையதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை.”இங்ஙனமாக ஒருமையை (அறிவையும் ஒழுக்கத்தையும்) பெற்றால் தான் தயவு என்னும் ‘கருணை’ வரும்.இன்னும் முழுமையாக தெரிந்து தெளிவு அடைய “மகாபேருபதேசத்தை” ஒருமுறை ஊன்றி வாசித்தே ஆக வேண்டும்.இதோ அந்த மகாபேருபதேசம் உள்ளது உள்ளபடியே:நன்றி ஏபிஜெ அருள்





ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாகஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிஎன்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க.மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதிதிருச்சிற்றம்பலம்பேருபதேசம் முற்றிற்று. -
முருகா முருகா …
முருகா..முருகா…— ஏபிஜெ அருள்
( சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து உபதேசித்தது)— ஆறுமுகப் பெருமான், சண்முகக்கடவுள், கந்த சாமி.திருச்சிற்றம்பலம்சண்முக மணி என்பது என்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியைசண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதை ஆறுமுகம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும், சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே ஷண்முகம் .ஆறு சோதியாயும், ஆறறிவாயும், ஆறு தலையுடையதாயும் இருப்பதால் முகம் ஆறு. கால் இரண்டென்பது தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷயவுணர்ச்சியும், நிர்விஷய உணர்ச்சியுமேயாம். கை பன்னிரண்டென்பது ஆறாதாரங்களிலுள்ள பிரகாச அப்பிரகாச மாகிய பன்னிரண்டுமாம். தசாயுதம் அபய வரத மென்பவை யாவெனில்: வச்சிரம் என்பது தீக்ஷண்ணியவுணர்ச்சி; வேல் என்பது சத்தி, அருள், அறிவு; மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம்; த்வஜம் என்பது கீர்த்தி; ஸரஸ’ஜம் என்பது தயவு; குக்குடம் என்பது மாச்சரியமில்லாத நிறைவு; பராகம் என்பது பாசநீக்கம்; தண்டம் என்பது வைராக்கிய அறிவு; பாணம் என்பது அன்பு; அபயம் என்பது சமாதான உணர்ச்சி; வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னுஞ் சகிப்பு; கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம்; பல வர்ணமுள்ளதும், விசித்திர வடிவமானதும், மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும், மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்பிரகிருதியே மயிலென்பது.மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சண்முகம் .மேலும்….( சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து மேலும் உபதேசித்தது.
)ஆறுமுகம் -சண்முகம்ஒருமுகம், மூன்றுமுகம், நான்குமுகம், ஆறுமுகம் ஆனதற்குக் காரணம்: ஒன்று மிரண்டு மில்லாத ஒப்பற்ற பரப்பிரமசொரூபம் நம் பொருட்டுக் குழூஉக்குறியாய், பாவனைக்கு ஒன்றென்று நிச்சயிக்கும், பரகாரண நிமித்தம் (?) ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள். சுத்தராஜசம், சுத்ததாமசம், சுத்தசாத்விகமாகிய மூன்று குணங்களின் கூட்ட விளக்கமாகிய முக்குண விளக்கமே மூன்றுமுகம். பசுமனம், சுத்தமனம், உள்மனம், சங்கலிதமனம் என்னும் நான்கு தத்துவங்களின் கூட்டவிளக்கமே நான்கு முகம். சத்த அறிவின் மூலம், ஒளி யறிவின் மூலம், சுவை யறிவின் மூலம், பரிசவறிவின் மூலம், வாசனை யறிவின் மூலம், ஆத்ம அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம்.மயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பதென்ன?
விசித்திரமாயையின் காரியவுருவான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால், மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு வென்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய்ப் பிராணவாயுவினது வேகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது இயற்கைதான்.படைவீடென்ப தென்ன?
அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும்.இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்?
ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு – இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் – சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.பிரமாவைச் சிறையில் வைத்த தென்பது யாது?
சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலையுடைய பிரமாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க வொட்டாமல், சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்பிர மணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல், வளர்தல், குற்றம் நீங்கல், ஒன்றினிடத்தில் மலைவடைதல், தெளிதல் முதலிய பஞ்ச கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறையிட்டது.ஈசுவரனுக்கு உபதேசித்த தென்ன?உருத்திர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈசுவர தத்துவத்தினியற்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்திருப்பதால், கிரியாகாரண பூதமாயும் ஞானகாரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியையற்ற நிர்விஷய அனுபவம் ஈசுவர தத்துவத்திற்கு – நியதி செய்வது? – சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றித் தோன்றாது. இதுபற்றி யுபதேசஞ் செய்தாரென லாயிற்று.கங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன?
ஆன்ம இயற்கைக் குணமாகிய தயவே கங்கை. ஆன்மாவின் அனுபவ மத்திய நிலையாகிய சகித்தலென்னும் – சர்வ விஷயங்களிலும் அகங்கார மென்னும் தலையெடாமல் – கீழ்ப்படிந்த குணமே நாணல். இவ்விரண்டின் மத்தியில், அனுபவத்திற்கு இயற்கை விளக்கமாய் விளங்கும் பகுத்தறிவாகிய விவேகம் தோன்றுவதே உற்பத்தியானது.பின் கார்த்திகை அரிவை பால் கொடுத்த தென்பதென்ன?
விவேக விளக்கந் தோன்றுங்கால், பெண்பாலின் குணமாகிய சமனையென்னும் சத்தியின் விளக்கத்தால் இன்பமாகிய அமுத கிரணம் விவேகத்திற்கு ஊட்டுவதே பால் கொடுத்தல்.சுவாமி அம்மையிடத்தில் குழந்தையைக் கொடுக்க, அம்மை குழந்தை ஆறையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கையால் தடவ, முகம் ஆறும் ஒன்றி வேறாயும், உடல் ஒன்றாயும், கால் இரண்டாயும் ஆனதென்ன?
பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னும் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில்? தோன்றி விளங்கும்போது, சுத்த வாசனா தோற்றமாகிய அறுபொறியாகிய குழந்தையை யருள் வசமாக்க, அருட்சத்தி விகாரமன்றி அவிகாரமாய் அறு பொறியையும் அருட்போதக் கையால் அடக்க, விஷயங்களை அறிந்து தோயாமலிருக்க அறுபொறிகள் ஒன்றாயும், குறிஆறாயும், அனுபவவிளக்கம் சாதனவிளக்கம் இரண்டுந் திருவடியாயுந் தோன்றி, சமாதிநிலை விளங்குவதே.பிண்டத்தில் இவ்வண்ணமாக இருக்க, அண்டத்தில் இவற்றிற்கு ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டாவானேன்? ஆன்மாக்கள் புண்ணிய பாவ கருமங்களால் பேதப்பட்டு, மந்தம் மந்ததரம் ராஜசம் தாமசம் கருமம் முதலிய வேறுபாடுகளால் அனாதி தொடங்கி இன்றளவில் – உயிர்த்திரள் ஒன்றானாலும் – கரணக் கூட்டுறவால் வெவ்வேறு தன்மையாய் விளங்குகின்றன. ஆதலால் மாகருணையுடைய கிருபாநிதியாகிய சிவபெருமான் திருவருளை அங்கையிற் கனியெனவுணர்ந்த அனாதி நித்திய முத்த சித்தராகிய ஈசுவரதத்துவ புவனானுபவ ஈசுவரனால், நாம் உய்யும்பொருட்டு உலகத்தின்கண், பாச நூல்1 பசுநூல்2 அனுபவ நூல்3 என்னும் புராண1 வேத2 ஆகம3 உபநிஷத்துக்கள் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாகக் கர்மகாண்டம், பத்திகாண்டம், உபாசனா காண்டம், தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை முதலிய பேதங்களும், இவற்றிற்கு முக்கியமான ஆசாரம், வருணம், ஆசிரமம் முதலியவைகளும், இவற்றிற்கு ஏதுவான சரியாதி நான்கும், இவற்றிற்கு அடைவாகிய சாலோகாதி நான்கும், இவற்றிற்கு மார்க்கமாகிய தத்துவம், புவனம், பதம், வர்னம், மந்திரம், கலை முதலியனவும் நிர்ணயித்து, பாவநாசத்திற்கு ஏதுவான அனசன சாந்திராயண முதலிய பிராயச் சித்தங்களை விதித்து, இவைகள் செய்வதற்கு யோக்கியமான நதி முதலியவற்றையும், அவற்றிற்கு அங்கமான – தத்துவானுபவங்களாகிய உண்மை நாமங்கள் கெடாதிருக்க – திருப்பெயர் முதலியவைகளை மூர்த்தி ஸ்தல முதலியவைகளுக்கு ஏற்படுத்தி வழங்கச் செய்தார்கள்.உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.
ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது.
அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், உண்மையாகிய விளக்க மென்னும் சண்முகப் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் – தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.இவ்வண்ணமாய், அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அக்கடவுளை உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.நன்றி: கருணை சபை சாலை, மதுரை.
முக்கியம்
–சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து உபதேசித்தது. அதன்பிறகு தத்துவங்களை வணங்காது, உபநிஷத்துக்களை தவிர்த்து, இறைவனை உள்ளது உள்ளபடி தெரிந்துக் கொள்ள,” அறிவால் பணிந்து தணிந்து நெகிழ்ந்து இரக்கத்தால் வழிபாடு செய்தலே”#- உண்மை-# என்கிறார். இவ்வழியில் இறைவன் தன் ஜோதி சொரூபத்தை, நன்முயற்சி யாளர், உள்ளத்தில் காட்டுவதாக உள்ளது என்கிறார் வள்ளலார். இவ்வழிக்கு சுத்த சன்மார்க்கம் எனப் பெயரிட்டு வெளிப்படுத்தினார் வள்ளலார்.
ஏபிஜெ அருள். ) -

சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872
சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872
உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!
அறிவு வந்த கால முதல்
- அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
- அடைந்து அறியாத அற்புத குணங்களையும்,
- கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும்,
- செய்து அறியாத அற்புச் செயல்களையும்,
- கண்டு அறியாத அற்புதக்காட்சிகளையும்,
- அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,
இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப் பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.
இயற்கையிற்றானே விளங்குகின்றவராயுள்ளவரென்றும், இயற்கையிற்றானேயுள்ளவராய் விளங்குகின்ற வரென்றும்,
இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும்,
- எல்லா அண்டங்களையும்,
- எல்லா உலகங்களையும்,
- எல்லாப் பதங்களையும்,
- எல்லாச்சத்திகளையும்,
- எல்லாச் சத்தர்களையும்,
- எல்லாக் கலைகளையும்,
- எல்லாப் பொருள்களையும்,
- எல்லாத் தத்துவங்களையும்,
- எல்லாத் தத்துவி களையும்,
- எல்லா உயிர்களையும்,
- எல்லாச்செயல்களையும்.
- எல்லா இச்சைகளையும்,
- எல்லா ஞானங்களையும்,
- எல்லாப் பயன்களையும்,
- எல்லா அனுபவங்களையும்
- மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்
- தோற்றுவித்தல்,
- வாழ்வித்தல்,
- குற்றம் நீக்குவித்தல்,
- பக்குவம் வருவித்தல்,
- விளக்கஞ்செய்வித்தல், முதலிய
பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,
எல்லாம் ஆனவரென்றும்,
ஒன்றும் அல்லாதவரென்றும்,
சர்வகாருணிய ரென்றும்,
சர்வவல்லபரென்றும்,
எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும்
ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும்
சத்திய அறிவால்அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும்வண்ணங்க எல்லாமாகி விளங்குகின்றார்.
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்துஅழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்
பலவேறு சமயங்களிலும்
பல்வேறு மதங்களிலும்
பலவேறுமார்க்கங்களிலும்
பல வேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள்.
இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,
- உண்மையறிவு,
- உண்மையன்பு,
- உண்மையிரக்கம் முதலிய
சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தைதயும்பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.
ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப்பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும் அடைவீர்கள்.
-
சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்
சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.
மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்… மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.